இன்று(25/04/2025)எமது பாடசாலையில் மறைந்த பாப்பரசர் 1ம் பிரான்சிஸ் அவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. பாப்பரசர் 1ம் பிரான்சிஸ் அவர்கள்
1936 ஆம் ஆண்டு தென்அமெரிக்காவில் ஆஜந்தீனாவில் பியுனஸ் அயர்ஸ் இல் பிறந்து, 1958 இல் இயேசு சபையில் இணைந்தார்.
2013 இல் 266 ஆவது பாப்பரசராக திருநிலைபடுத்தப்பட்டு 2025 .04. 21 இல் தனது 88 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். இயற்கை மீது தீராத அன்பு கொண்டவர், முதலாளித்துவம், யுத்தங்கள் என்பவற்றிற்கு எதிராக அமைதியான உலகிற்காக குரல் கொடுத்தவர்.
உரோம சாம்ராச்சியத்தின் வத்திக்கான் நாட்டின் அரச தலைவராகவும், ஆன்மீகதலைவராகவும் திகழ்தார். உலகில் வாழும் 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் மட்டுமல்லாது உலகில் அன்பை நேசிக்கும் எல்லோராலும் கொண்டாடப்படுபவர்.
ஐரோப்பா கண்டத்திற்கு வெளியில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர், அதேபோல் இயேசு சபையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒருவராகவும் காணப்பட்டார்.
இவ்வாறு மனிதநேயம்மிக்க ஒரு தலைவருக்கு எமது கல்லூரியில் இன்று அஞ்சலி நிகழ்வு ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் இடம்பெற்றது. இதன்பொழுது கல்லூரி கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டு, ஆசிரியர்கள்,கல்வி சாரா உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களினால் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும், கல்லூரி அதிபர் அருட். சகோ. S. E. றெஜினோல்ட் FSC அவர்களினால் இரங்கல் உரையும் இடம்பெற்றது.







